தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் பரவல்.. வைரஸின் அறிகுறிகள் என்ன?.. எதிர்கொள்வது எப்படி?.!
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
டெங்கு வைரஸின் அறிகுறிகள் மற்றும் எதிர்கொள்வது எப்படி? என காணலாம்.
ஏடிஸ் கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் நலத்தை பலவீனப்படுத்தக் கூடிய வைரஸ் ஆகும். தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பரவலின் வீரியம் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,000ஐ கடக்கும் எனவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 14,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 7பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: டெங்குவுக்கு எமனாகும் பாகற்காய்.. ஆனா, சாப்பிடும் முன் இதை மறந்துடாதீங்க.!
டெங்குவின் அறிகுறிகள் :
பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகின்றன. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். 24 மணிநேரத்தில் காய்ச்சல் குறையாத பட்சத்தில் மருத்துவரை அணுகாவிடில் வைரஸ் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு :
டெங்கு காய்ச்சல் உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலிகளை ஏற்படுத்தும். நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒருமுறை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்களாகும். அதற்குள் இரண்டாவது முறையாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும். அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் கூறும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இளநீர், பப்பாளி சாறு போன்ற திரவங்களை உட்கொள்வது டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் மீள்வதற்கு உதவும்.
இரத்த அணுக்களை தாக்கும் டெங்கு வைரஸ் :
டெங்குவால் உடலில் உள்ள பிளேட்லெட் எனப்படும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். மேலும் ரத்த அணுக்களை நிறமற்றதாக மாற்றுவதால் ரத்த உறைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். அப்படி பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும்.
இதையும் படிங்க: கோவை: 21 மாணவ-மாணவிகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு; தனியார் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.!