கணவனைக் கொன்று விட்டு நள்ளிரவில் நாடகமாடிய மனைவி; அரக்கோணத்தில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!
கணவனைக் கொன்று விட்டு நள்ளிரவில் நாடகமாடிய மனைவி; அரக்கோணத்தில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!
அரக்கோணத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவியின் பெயர் லட்சுமி.
பிரபுவிற்கும் லட்சுமிக்கும் வீட்டில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வீட்டிலிருந்த இருவரும் சண்டையிட்டுள்ளனர். பின்பு பிரபு வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். கணவனின் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த லட்சுமி தனது துப்பட்டாவால் தூங்கிக்கொண்டிருந்த பிரபுவின் கழுத்தை இறுக்கி உள்ளார். அதில் பிரபு துடிதுடித்து இறந்து விட்டார்.
பிரபு இறந்து விட்டதை உணர்ந்த லட்சுமி இந்த சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு நாடகம் ஆட முடிவு செய்தார். அதன்படி கட்டிலிலிருந்து பிரபுவை கீழே தள்ளிவிட்டார். பின்பு வீட்டிலிருந்து அலறியபடி வெளியில் ஓடி வந்தவர் அக்கம்பக்கத்தினரிடம் தனது கணவர் கட்டிலிலிருந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்து விட்டார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவி செய்யுமாறு கதறியுள்ளார்.
அவரது இந்த நாடகத்தை நிஜம் என்று நம்பிய அக்கம்பக்கத்தினரும் பிரபுவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கு பிரபுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பிரபுவின் மனைவி லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கேள்விகளுக்கு பயந்து உளற தொடங்கினாள் லட்சுமி. இறுதியில் வேறு வழியில்லாமல் தான் தான் பிரபுவை கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து லட்சுமியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.