இளைஞர்களை மது குடிக்க ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு... காரணம் இதுதான்..!

இளைஞர்களை மது குடிக்க ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு... காரணம் இதுதான்..!



The Japanese government encourages young people to drink alcohol... this is the reason..

ஜப்பானில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அதிகமாக மது குடிக்க அரசே ஊக்குவித்து அதற்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. 

ஜப்பானில் கொரோனா பெருந்தொற்றால், கடந்த இரண்டு வருடங்களாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இதனால், அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டு தேசிய வரி கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-ஆம் வருடத்தில் குடிமக்கள் குறைந்த அளவே மதுபானம் குடித்துள்ளனர் என தெரிவித்துள்ளது. கடந்த 1995-ஆம் வருடத்தில் மக்கள் குடித்த மதுபானம் நூறு லிட்டர் என்ற அளவில் இருந்தது. ஆனால், இது 75 லிட்டராக குறைந்திருக்கிறது என ஒப்பீட்டு அளவையும் தெரிவித்துள்ளது. 

கொரோனா பெருந் தொற்றுக்கு பின்னர், ஜப்பானில் மக்கள் தொகை விகிதமும் ஜப்பானில் குறைந்துள்ளது. எனவே, மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாகவும், மேலும் ஜப்பானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ஜப்பான் அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக சேக் விவா என்ற பெயரில் ஜப்பானின் தேசிய வரி கழகம் பிரசாரம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. மதுபானங்களின் தேவையை அதிகரிக்க உதவி புரிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வரும்படியும் அந்த கழகம் தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்று நடத்தவுள்ளதாகவும், இதில், 20 வயது முதல் 30 வயதுவரை உள்ள மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். 

மேலும் அவர்கள் மதுபானம் குடிப்பதற்கான வரவேற்கத்தக்க புதிய கருத்துக்களை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சேக், சோச்சு, பீர், விஸ்கி, ஒயின் போன்ற மதுபானங்களின் தேவையை அதிகரிக்க செய்வது மற்றும் வெவ்வேறு சுவைகளை பற்றியும், புதிய வாழ்வியல் வழிகளை பற்றியும் கருத்து கூற கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவோர் செப்டம்பர் 27-ஆம் தேதி தேர்வு செய்யப் பட உள்ளனர். அதற்கு அடுத்த சுற்று அக்டோபர் மாதம் நடைபெறும். மேலும் அதன் முடிவுகள் டோக்கியோ நகரில் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.