இருளில் மூழ்கிய அமெரிக்க மாகாணங்கள்; மிக பயங்கரமான பனிப்புயல் தாக்கியதில் தவிக்கும் மக்கள்..!!



American provinces plunged into darkness; People are suffering due to worst snow storm..

அமெரிக்காவில் 112 கி.மீ வேகத்தில் பனிப்புயல் தாக்கியதின் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருகின்றனர். 

உலகில் புவி வெப்பமயமாதல் காரணங்களால் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் காரணமாக இது வரை இல்லாத அளவு, உலகில் உள்ள பல நாடுகளில் வெயில், குளிர், மழை, பனி என அனைத்து காலநிலைகளும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பனிப்புயல் மிகவும் மோசமாக அமெரிக்க மாகாணங்களை தாக்கியது. 

இந்த புயலால் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பனிப்புயலால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்தன. 

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் அந்த மாகாணத்தையே புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தெருவெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்துள்ளன. மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாகாணத்தின் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதேபோல் ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் குவிந்து கிடப்பதால் அங்கு ரயில் சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 

புயலின் காரணமாக மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருளில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா முழுவதும் பனிப்புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன