ஓடும் ரயிலில் வழிப்பறி செய்தவர்கள்! விரட்டி பிடிக்க முயன்ற இளைஞன்! துரதிஷ்டவசமாக நடந்த சோக சம்பவம்!
ஓடும் ரயிலில் வழிப்பறி செய்தவர்கள்! விரட்டி பிடிக்க முயன்ற இளைஞன்! துரதிஷ்டவசமாக நடந்த சோக சம்பவம்!
மதுரை மாவட்டம் புதூர் அருகே உள்ள பரசுராம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞன் கடந்த 31-ஆம் தேதி அன்று அவரது தாய் மற்றும் உறவினர்களுடன் மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலில் எறியுள்ளார். அந்த ரயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்ட போது, பாலாஜியின் உறவினர் பெண் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.
இதைப்பார்த்த பாலாஜி அவரை பிடிக்க முயன்றார். அப்போது ஓடும் ரயிலில் இருந்து அந்த நபர் குதித்து தப்பிச்சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த பாலாஜியும் ரயிலில் இருந்து குதித்தார்.
பாலாஜி ரயிலில் இருந்து குதிக்கும்பொழுது, தவறிவிழுந்து ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்தார். இதனையடுத்து தகவலறிந்த ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று, கொடைரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 6 பேரை மதுரை போலீசார் பிடித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களில் ஒருவர், ரயிலில் அடிபட்டு வாலிபர் இறக்க காரணமானவர் என்பதை தெரிந்துகொண்ட போலீசார் 6 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் 6 பேரும் மதுரை மாவட்டம் புதூரை சேர்ந்தவர்கள் என்பதும், கொடைரோடு ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் பயணம் செய்பவர்களிடம் வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது.
போலீசாரிடம் சிக்கியவர்களில் 5 பேர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்ததும், செலவுக்காக வழிப்பறி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.