கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் மகன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் மகன்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
சென்னை பழைய பல்லாவரம் திருவள்ளுவர் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜன். இவர் தச்சு தொழிலாளியாக இருந்துவந்துள்ளார். இவருடைய மனைவி குளோரியா. இந்த தம்பதிகளுக்கு அந்தோணி என்ற மகன் இருந்துள்ளார்.
ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 31-ஆம் தேதி வழக்கம்போல், மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராஜன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜனின் மனைவியும் மகனும் அவரை கண்டித்து அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகரித்துள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜனின் மகன் அந்தோணி அவரது தந்தையை பிடித்து கீழே தள்ளிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில், தெருவில் நடந்து வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராஜன் படுகாயம் அடைந்ததாக புகார் செய்தனர்.
இதற்கிடையில் ராஜனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி ராஜன் உயிரிழந்தார். இதனையடுத்து விபத்து நடந்தது என கூறப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜன், விபத்தில் சாகவில்லை என்பதும், கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்து இறந்ததும், போலீசாரிடம் உண்மையை மறைக்க விபத்து என நாடகம் ஆடியதும் தெரியவந்தது. இதனையடுத்து ராஜனின் மனைவி குளோரியா, மகன் அந்தோணி இருவரையும் கைது செய்தனர்.