தேர்தலில் களமிறங்கும் ஜூனியர் கேப்டன்.! வழியனுப்பி வைத்த விஜயகாந்த.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் அணைத்து காட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.
தற்போதுவரை அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. ஆனாலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தொகுதியின் பெயரை குறிப்பிடாமல் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட மனு தாக்கல் செய்தார். தொகுதி குறிப்பிடாமல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக தொண்டர்களின் விருப்பத்தின்படி, விருப்ப மனு அளித்துள்ளேன். முதல் முறையாக தேமுதிக தரப்பில் விருப்பமனு அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘சென்றுவா வெற்றி நமதே’ என அப்பா என்னை வாழ்த்தி அனுப்பினார். தமிழகத்தில் எங்கு நின்றாலும், தேமுதிக தொண்டர்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என தெரிவித்தார்.