16 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெண்ணை கடத்திச்சென்று பள்ளி ஆசிரியர் செய்த மோசமான செயல்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!



Two rescued, including a girl abducted by a teacher

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த இவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கீன நடவடிக்கையால் 2019 ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யபட்டார். இதனையடுத்து கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி, அங்கிருந்த நடன பள்ளியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் தங்கியிருந்த அறையின் பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் டியூசனுக்கு வந்து சென்ற சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி மணிமாறன் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை தேடி வந்தனர்.

இதனையடுத்து சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற மணிமாறன், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் 19 வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணையும் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று தலைமறைவானார். இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மணிமாறன் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியையும், கன்னியாகுமரியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் மணிமாறன் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறுமி மற்றும் இளம் பெண் ஆகிய இருவரையும் மீட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவையை சேர்ந்த சிறுமி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த இளம் பெண் ஆகிய இருவரையும் திருப்பதியில் மணிமாறன் தெரு தெருவாக டீ விற்க வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.