தூத்துக்குடி தந்தை-மகன் உயிரிழப்பை கொலை வழக்காக பதிந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்! டிடிவி தினகரன்!

தூத்துக்குடி தந்தை-மகன் உயிரிழப்பை கொலை வழக்காக பதிந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்! டிடிவி தினகரன்!


ttv dhinakaran talk about thothukudi death


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் மொபைல் கடை வைத்திருப்பவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20ஆம் தேதி ஊரடங்கின் போது கடையை திறந்ததாக கூறி போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். காவல் நிலையத்தில் விசாரணையின்போது, போலீசார் தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தந்தை - மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.

காவல்துறையினர் தாக்கியதால்தான் இருவரும் பலியாகியிருப்பதாக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

வணிகர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு  வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.