பிணத்தை சாக்கில் கட்டி கிணற்றில் வீச முயற்சி; போலீசை கண்டதால் தப்பி ஓட்டம்: பரபரப்பான சேஸிங்..!
பிணத்தை சாக்கில் கட்டி கிணற்றில் வீச முயற்சி; போலீசை கண்டதால் தப்பி ஓட்டம்: பரபரப்பான சேஸிங்..!
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை வ. உ.சி நகர், சிவன் கோவில் பகுதியில் உள்ள மொட்டை கிணறு அருகே சந்தேகப்படும்படியான ஆள் நடமாட்டம் இருப்பதாக புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கிணற்றின் அருகே சாக்கு முட்டையுடன் ஒருவர் நின்று கொண்டு இருந்துள்ளார்.
காவல்துறையினர் தன்னை நோக்கி வருவதை அறிந்த அவர் மூட்டையை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். காவல்துறையினர் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த மூட்டையில் ஒரு முதியவர் அடித்து கொலை செய்து உள்ளே வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் அந்த உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சாயர்புரம் பகுதியை சேர்ந்த சிம்சன் (75) என்பது தெரியவந்தது. இவரது மூத்த மருமகனான ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் முருகன் என்பவருக்கும், சிம்சனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், முருகன், சிம்சனை அடித்து கொலை செய்து, தனது லோடு ஆட்டோவில் வைத்து உடலை கிணற்றில் வீசுவதற்காக கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.