தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள ஓடி வந்த இளம்பெண் விபத்தில் பலியான சோகம்..!

தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள ஓடி வந்த இளம்பெண் விபத்தில் பலியான சோகம்..!



Tragedy of a young girl who was running to attend her father's funeral

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியபனமுட்லு கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன். இவர் ஒரு விவசாயி. இவரது மகள் சௌந்தர்யா (23). இவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை  பெரியபனமுட்லுவில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற திம்மராயன், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

விபத்தில் தந்தை உயிரிழந்தது குறித்து தகவலறிந்த சௌந்தர்யா, அவரது ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக கடந்த ஞாயிறு அண்று கணவர் மற்றும் குழந்தையுடன் பேருந்தில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தை வந்தடைந்தார். இதன் பின்னர், அவர்கள் மூவரும் பெரியபனமுட்லு கிராமத்திற்கு ஆட்டோவில் பயணித்தனர்.

மூவரும் சென்ற ஆட்டோ கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் வேட்டியம்பட்டி கிராமத்தை கடந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத பேருந்து ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. எதிர்பாராத விபத்தில் சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர், குழந்தை மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்திற்க்கு அங்கிருந்தவர்கள் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சௌந்தர்யாவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள வந்த மகள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.