அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி.! ஆசைகாட்டி வரவழைத்து தர்ம அடி... போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது.!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி.! ஆசைகாட்டி வரவழைத்து தர்ம அடி... போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது.!



three people arrested in pudukkottai

சென்னை, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள்(36), புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் உள்ள வாலிபர்களிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. வேலைக்காக பெருமாளிடம் பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், மேலும் சிலருக்கு வேலை வேண்டும், பணம் தயாராக உள்ளது என்று நைசாக பேசி பெருமாளை புதுக்கோட்டைக்கு வரவழைத்த சிலர் அவரை கீரமங்கலத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள ஒரு கொட்டகையில் அடைத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு காயமடைந்த பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பெருமாள் கொடுத்த புகாரின்பேரில், அவரை தாக்கியதாக ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவன் (29) பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய பெருமாள், அவரை தாக்கியதாக ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவன் மற்றும் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த வசந்த் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.