அச்சோ... மகனைத் திருத்த ஆசிரியை எடுத்த விபரீத முயற்சி... துயரத்தில் முடிந்த பரிதாபம்.!
பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரிந்த மகனை திருத்துவதற்காக தற்கொலை செய்வது போல் நாடகமாடிய பள்ளி ஆசிரியை எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிருஷ்ணவேணி(51). கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 15 வயது மகனான விஸ்வநாத் நாராயணனுடன் வசித்து வந்தார். இவரது மகன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளி திறந்த நாள் முதல் விசுவநாத் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்லவில்லை என்று தெரிகிறது. வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நண்பர்களுடன் சுற்றித் திரிவதாக பள்ளி நிர்வாகம் ஆசிரியை கிருஷ்ணவேணியிடம் புகார் தெரிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர் தனது மகனை அழைத்து எச்சரித்து இருக்கிறார் . மேலும் ஒழுங்காக பள்ளி செல்லவில்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி கழுத்தை கயிற்றில் மாட்டி தூக்கு போடுவது போல் நாடகமாடியுள்ளார் .
தனது தாய் தன்னை பயமுறுத்துவதற்காக தான் இவ்வாறு செய்கிறார் என கருதி அவரது மகன் வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு ஆசிரியையின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் பரிதாபமாக இருந்திருக்கிறார் ஆசிரியை கிருஷ்ணவேணி. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.