வீட்டுக்கு தீ வைத்து மூதாட்டி எரித்துக் கொலை..!! முன்விரோத்தால் பயங்கரம்..!!

வீட்டுக்கு தீ வைத்து மூதாட்டி எரித்துக் கொலை..!! முன்விரோத்தால் பயங்கரம்..!!



The incident of burning an old woman to death due to an animosity has created a stir in Ramanathapuram.

முன்விரோதம் காரணமாக மூதாட்டியை எரித்து கொன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு ( 71). இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி மங்கயர்கரசி. ராசுவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70) என்பவருக்கும் நில தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த சித்திரவேலு, ராசுவை பழிவாங்க திட்டமிட்டார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ராசுவின் வீட்டு வாசலில் விறகுகளை அடுக்கிய சித்திரவேலு அதன் மீது மண்ணெண்னையை ஊற்றியுள்ளார். இந்த சமயத்தில் வெளி திண்ணையில் கட்டிலின் மீது ராசுவின் தாயார் பாப்பு அம்மாள் (95) தூங்கியதாக தெரிகிறது.

பின்னர் தீப்பந்தத்தின் மூலம் விறகுகளுக்கு சித்திரவேலு தீ வைத்துள்ளார். சற்று நேரத்தில் மளமளவென பிடித்து எரிந்த தீ கட்டிலில் படுத்திருந்த பாப்பு அம்மாள் மீதும் பரவியது. இதனால் அலறிய பாப்பு அம்மாளின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்திருந்த அவருடைய மகன் ராசு, மருமகள் மங்கையர்க்கரசி ஆகியோர் எழுந்து முன்பக்க கதவை திறக்க முயன்றனர்.  

இரும்பு கம்பியால் கதவு கட்டப்பட்டிருந்ததால் அவர்களால் திறக்க முடியவில்லை. இதையடுத்து பின்பக்க கதவை உடைத்தனர். பின்பக்க வாசலிலும் தீ எரிந்து கொண்டிருந்தாலும், எப்படியோ தப்பி வெளியே ஓடி வந்துள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தோர் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே சித்திரவேலுவின் வீட்டிலும் தீ பரவியதால், அவர் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்ததுடன் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பாப்பு அம்மாளை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பாப்பு அம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவாடானை காவல்துறையினர், தப்பியோடிய சித்திரவேலுவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.