தாயும்-மகளுமான பாசபந்தம்.. கிணற்றில் கட்டியணைக்கப்பட்டவாறு மீட்கப்பட்ட சடலம்.. உயிரைக்காப்பற்ற எண்ணி நடந்த பரிதாபம்.!
கரும்பு வெட்டும் கூலியாக சென்றவர்களின் மகள் மற்றும் உறவினர் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. நெஞ்சை உலுக்கும் சோக தகவலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் கரும்பு தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரை சார்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ஆர்.எஸ் மணி நகர் ஒன்பதாவது தெருவை சார்ந்தவர் கார்த்திக். இவர் மற்றும் இவரது குடும்பத்தைச் சார்ந்த 20 பேர் சிவகிரியில் தங்கி இருந்து கரும்பு தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று மதியம் தோட்டத்தில் கார்த்திக்கின் மகள் ஜீவ ஸ்ரீ (வயது 4) விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அவர் திடீரென மாயமாகவே, அக்கம் பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் சிறுமி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவகிரி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கிணற்றில் சிறுமியை தேடுகின்ற பணியில் ஈடுபட்டனர். இதில், பெரும் அதிர்ச்சி தரும் விஷயமாக சிறுமியின் உடலும், அவரின் உறவினர் மலர் என்பவரின் உடலும் கட்டியணைத்தவாறு மீட்கப்பட்டது. விசாரணையில் பெண்மணி பண்ருட்டியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி மலர் (வயது 35) என்பது உறுதியானது.
தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கிணற்றில் விழுந்துவிட்ட நிலையில், உறவினரான மலர் குழந்தையை மீட்க குதித்த போது இருவரும் நீச்சல் தெரியாமல் உயிரிழந்ததும் அம்பலமானது. இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த சிவகிரி காவல்துறையினர், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.