தமிழ்த் தேசியவாதி சீதையின் மைந்தன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்…! சீமான் இரங்கல்.!



seethai mainthan Passed Way 

 

தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர், தமிழிய பேரியக்க நிறுவனர் சீதையின் மைந்தன். இவர் தமிழர்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதை தடுக்க பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். கச்சத்தீவு புத்தகம் எழுதி, கச்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை சான்றுகளுடன் தெரியப்படுத்தியவர் ஆவார். 

இவர் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வா.க வேலுமுருகன் உட்பட பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், தமிழியப் பேரியக்க நிறுவனருமான ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தமிழர் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து களம் கண்ட ஐயா சீதையின் மைந்தன் அவர்கள் இறுதிநொடி வரை சமரசமற்ற தமிழ்த்தேசியவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர். கட்சத்தீவு மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக சிறப்புற செயலாற்றியதுடன்,  கட்சத்தீவு குறித்து புத்தகம் எழுதி கட்சத்தீவு தமிழர்களுக்கு சொந்தமான பூர்வ நிலம் என்பதை தக்க வரலாற்றுச் சான்றுகளுடன் நிறுவியவர்.

தமிழ் மண்ணின், மீதும் மக்களின் மீதும் அளவற்ற பற்று கொண்டு,  திராவிட சூழ்ச்சி அரசியலை அம்பலப்படுத்தும் அரும்பணி புரிந்த ஐயா சீதையின் மைந்தன் அவர்களின் இழப்பென்பது தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசியப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன். ஐயா சீதையின் மைந்தன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.