திருநங்கைகளுக்குள் நடந்த பிரச்சனை! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
திருநங்கைகளுக்குள் நடந்த பிரச்சனை! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
சென்னையை அடுத்த மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருநங்கைகள் அதிக அளவில் தங்கி இருந்தனர். கடந்த வாரம் அங்குள்ள கல்குவாரியில் குளிக்க சென்றபோது 24 வயது நிரம்பிய திருநங்கையான சவுமியா அங்குள்ள கல்குவாரியில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 நாட்கள் சவுமியா உடலை தேடி வந்தனர். இந்தநிலையில் அழுகிய நிலையில் சவுமியாவின் உடலை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே காஞ்சீபுரம் அருகே குருவிமலை,கடந்த 19-ஆம் தேதி இரவு நேரத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த திருநங்கைகளை கடத்தி சென்றனர். இதனையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட திருநங்கைகளான 5 பேரை சிக்கராயபுரத்தில் மீட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த திருநகைகளான மகாலட்சுமி, வடிவு, சூரியா,லத்திகா, அருணி மற்றும் கார் டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மாங்காட்டில் திருநங்கைகள் ஒரு வீட்டில் தங்கி கடை, கடையாக சென்று பணம் வசூல் செய்வது மற்றும் கைத்தொழில் உள்ளிட்டவைகளை செய்து வந்தனர்.
இவர்களுக்கு தலைவியாக மகா செயல்பட்டு வந்தார். திருநங்கைகள் வசூல் செய்யும் பணத்தில் ஒரு தொகையை மகாவிடம் கொடுக்க வேண்டும். இந்த குழுவில் இருந்த சவுமியா, மகாவிற்கு எதிராக செயல்பட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த மகா, சவுமியா இப்படி செய்கிறாளே, நீங்கள் கேட்க மாட்டீர்களா என மற்ற திருநங்கைகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் கல்குவாரியில் திருநங்கைகள் குளிக்க சென்றபோது அவர்கள் இடையே நடந்த மோதலில் சவுமியா தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து உடலை கல்குவாரியில் வீசி விட்டு அவர் குளிக்கும்போது தவறி விழுந்து இறந்து விட்டதாக சக திருநங்கைகள் நாடகமாடி உள்ளனர். இதனையடுத்து மற்ற திருநங்கைகள் அங்கிருந்து தப்பித்து காஞ்சீபுரம் சென்று விட்டனர். இதனால் போலீசால் சிக்கி கொள்வோமோ என பயந்து போன மகா காஞ்சீபுரம் சென்று அங்கு இருந்த திருநங்கைளை கடத்தி வந்தது தெரியவந்தது.