ஒருதலைக் காதல் ... மதுபோதையில் மாணவி வீட்டில் பெற்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது ...!!

ஒருதலைக் காதல் ... மதுபோதையில் மாணவி வீட்டில் பெற்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது ...!!



One Side Love... Youth arrested for throwing petrol bomb at student's house while under the influence of alcohol...

மதுரை அருகே பள்ளி மாணவி காதலிக்க மறுத்ததால்  அவரது வீட்டில் குண்டுகளை வீசி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மேல அனுப்பானடி வடிவேலன் தெருவில் மண்பானை தொழில் செய்து வரும் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். சரவணகுமாரின் எதிர் வீட்டில் மருதுபாண்டி என்பவரின் குடும்பம் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சரவணக்குமாரின் 15 வயது மகளுக்கு, மருதுபாண்டியின் மகன் மணிரத்னம் (23) காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தந்தை சரவணக்குமார், மணிரத்னத்தை கண்டித்துள்ளார். மணிரத்னத்தின் தொந்தரவு தொடர்ந்து கொண்டே இருந்ததால் சரவணக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு பிரச்னை வேண்டாம் என நினைத்த மருதுபாண்டி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து சின்னக்கண்மாய் பகுதியில் வீடு பார்த்து சென்றனர். இதனிடையே அடிதடி திருட்டு, போன்ற பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்ட காரணத்தினால் சிறையில் இருந்த மணிரத்னம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், பழைய குற்ற வழக்குகளுக்காக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். போதை தலைக்கேறியவுடன் அதே ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சரவணக்குமாரின் வீட்டிற்கு சென்ற மணிரத்னம் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றார். அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, வெடிகுண்டு வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணக்குமார் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூன்று மணி நேரத்தில் மணிரத்னம் மற்றும் அவரது நண்பர் பார்த்தசாரதி (22) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இரண்டு நண்பர்களை தேடி வருகின்றனர்.