சொத்து தகராறில் பயங்கரம்.. அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி..!
சொத்து தகராறில் பயங்கரம்.. அக்காவை வெட்டிக்கொன்ற தம்பி..!
சொத்தில் பங்கு கேட்ட அக்காவை, சொந்த தம்பியே அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், அழகாபுரியில் வசித்து வருபவர் பாஞ்சாலி (வயது 58). இவரது சகோதரர் சேவல்பட்டி பகுதியில் வசித்து வரும் ரமேஷ் (வயது 50) ஆவார். இவர்களுக்கு சேவல்பட்டியில் சொந்தமாக 3 பூர்வீக வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், மூன்று வீடுகளில் தனது பங்கை பிரித்துக் கொடுக்குமாறு பல ஆண்டுகளாக தனது தம்பியிடம் பாஞ்சாலி கேட்டு வந்துள்ளார். இதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் இன்று பாஞ்சாலி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டுக்குள் இருந்த அரிவாளை எடுத்து வந்து, உடன் பிறந்த சகோதரி என கூட பாராமல் பாஞ்சாலியை வெட்டிக் கொன்றுள்ளார்.
மேலும், கொலை செய்து விட்டு 'நான் தான் கொலை செய்தேன்' என்று அரிவாளுடன் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த விஷயம் தொடர்பாக ரமேஷ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.