மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை.! பேரன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தாத்தாவும் மரணம்!

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை.! பேரன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தாத்தாவும் மரணம்!


medical college student suicide

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ். 22 வயது நிரம்பிய இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார் ஆகாஷ். 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு தூங்கச்சென்ற ஆகாஷ் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறைக்குள் ஆகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆகாஷின் பெற்றோர்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.

suicide

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தூக்கில் தொங்கிய ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆகாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதற்காக தனியார் நிறுவனங்களிடம் மனநல ஆலோசனை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மன உளைச்சல் காரணமாகவே ஆகாஷ் தற்கொலை செய்துகொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆகாஷ் இறந்த செய்தியைக் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த அவரது தாத்தா ஜெயராமன் என்பவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.