கட்டுக்கட்டாக பணத்துடன் நடுவழியில் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி; மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
கட்டுக்கட்டாக பணத்துடன் நடுவழியில் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி; மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
கர்நாடகாவில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு பணம் கொண்டு வந்த கண்டெய்னர் லாரி திடீரென நடுவழியில் பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த லாரியில் புதிய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ஏற்றப்பட்டிருந்தன.
கட்டுக்கட்டாக பணம் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி நேற்று இரவு 10.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஸ்கை வாக் வணிக வளாகத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்றது.
பல கோடி ரூபாய் நோட்டுகள் கண்டெய்னரில் இருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து அதைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கூடினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் லாரியைச் சுற்றி நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே பழுதை சரி செய்வதற்கு சிறிது நேரம் பிடிக்கும் என்பதால் மாற்று வழியில் லாரியை நகர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வேறொரு லாரி கொண்டு வரப்பட்டு அதன் பின்புறமாக பழுதான லாரி இணைக்கப்பட்டது.
அதன் பின்னர் சில நிமிடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் லாரி இழுத்துச் செல்லப்பட்டது. இந்த லாரியில் மைசூரில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகவும், இந்த ஒரு லாரி மட்டுமின்றி மேலும் சில லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே பாதுகாப்பாக ரிசர்வ் வங்கியை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.