எந்த சாதியாக இருந்தாலும்... இரு பெண்களின் அப்பாவாக பொங்கியெழுந்த நடிகர் கமல்! ஆவேசத்துடன் விடுத்த வேண்டுகோள்!!

எந்த சாதியாக இருந்தாலும்... இரு பெண்களின் அப்பாவாக பொங்கியெழுந்த நடிகர் கமல்! ஆவேசத்துடன் விடுத்த வேண்டுகோள்!!


kamal request to give punishment who abuse students

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபாலன். இவர் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வந்து பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமக்கு கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும். இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’ இன்றும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை.

கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நமது பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.  பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன்.  குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச்சமூகமாக நாம் அனைவரும் போராடி நீதியை நிலை நாட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.