வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை.. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு சம்பவம்.!
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை.. கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு சம்பவம்.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, தண்ணீர்பந்தல்காடு கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பு (வயது 60). இவரின் கணவர் கந்தசாமி. இவர் கடந்த 35 வருடத்திற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டார். பாப்புவுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், கோவில்காடு கிராமத்தில் உள்ள தனது அக்கா சரசின் வீட்டில் 20 வருடமாக தங்கி இருக்கிறார்.
மேலும், தனது அக்காவின் குழந்தைகளை தனது குழந்தைகள் போல கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்படும் சரசு, பெங்களூரில் இருக்கும் உறவினரின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். சரசுவின் மகன் கார்த்திக்கு (வயது 29), 20 ஆம் தேதி திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது.
இதனால் சரசுவின் கணவர் செங்கோட்டையன் (வயது 73) உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க ராசிபுரம் சென்றுள்ளார். வீட்டில் பாப்பு மட்டும் தனியே இருந்த நிலையில், காலையில் மோகன் என்பவர் எதர்ச்சையாக செங்கோட்டையனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, பாப்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக இருந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மோகன் செங்கோட்டையனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்த நிலையில், சின்னசேலம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பாப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாப்புவை யார்? எதற்காக? கொலை செய்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கொள்ளை முயற்சி ஏதும் நடக்காததால், பாப்புவை யார் கொலை செய்தனர் என்ற தேடலில் அதிகாரிகளுக்கு சவால் அதிகரித்துள்ளது.