தலைமைச்செயலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்!
தலைமைச்செயலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 17 ஆம் தேதி உலகபுகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 739 காளைகள் பங்கேற்றன. அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல காளைகள் மிகச்சிறப்பாக விளையாடி மாடுபிடி வீரர்களை ஓரங்கட்டியது. அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் நன்றாக நின்று சுற்றி விளையாடும் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரரை தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பின் ஓய்வுபெற்ற நீதிபதி முதல் பரிசினை அறிவித்தார். மதுரை புறநகர் மார்நாட் என்பவரின் காளைக்கு முதல்பரிசு அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பெண் உதவி ஆய்வாளர் அனுராதா அவர்களின் "ராவணன்" காளைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. ஜி.ஆர்.கார்த்தி அவர்களின் காளைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
அதேபோல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக அறிவிக்கப்பட்டன.
அதில் கறவை மாடுகள் ரஞ்சித் குமாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. இதனையடுத்து கார் பரிசு சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார் என கூறப்பட்டது.
இந்தநிலையில் இன்று தலைமை செயலகத்திற்கு ரஞ்சித் வரவழைக்கப்பட்டு, ரஞ்சித் குமாருக்கு கார் பரிசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினர்.