மூடப்படாமல் திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில்... தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்...!

மூடப்படாமல் திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில்... தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்...!



It is a pity that a 6-year-old boy died after falling into an open sewage tank...

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மூடப்படாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகேயுள்ள சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன் (35). லாரி ஓட்டுனரான இவர், நேற்று மாலை வீட்டிற்கு தண்ணீர் பிடிக்க, பைக்கில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார். 

மணிகண்டன் அங்குள்ள ஊராட்சி குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகே விளையாடிக்கொண்டிருந்த அவரது மகன் பிரதீப் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால்,  குடிநீர் குழாய் அருகே மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியை எட்டி பார்த்தபோது, அதில் சிறுவன் பிரதீப் தவறி விழுந்து மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. 

அங்கு இருந்தவர்களின் உதவியுடன் சிறுவன் பிரதீப்பை மீட்டு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.