பருவ வயது பெண்களும், பிரச்சனைகளும்... தாயாக மகளுக்கு ஆற்றவேண்டிய கடமை என்னென்ன?..!
பருவ வயது பெண்களும், பிரச்சனைகளும்... தாயாக மகளுக்கு ஆற்றவேண்டிய கடமை என்னென்ன?..!
13 வயது முதல் 19 வயது வரை உள்ள காலத்தினை பருவ வயது என்று அழைக்கிறோம். இதனை ஆங்கிலத்தில் Teenage என்று அழைப்பார்கள். இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் பெற்றோர்கள் அவர்களை அன்புடன் கவனிக்க வேண்டியது அவசியம்.
பருவ வயதில் பூப்பொய்வது சில குழந்தைகளுக்கு தாமதத்தை ஏற்படுத்தலாம். உடல் வளர்ச்சி சரியாக இருப்பின் 16 வயதில் கூட பருவமடைதல் நடக்கும். அதையும் கடந்தால் மருத்துவரை நாடுவது நல்லது. எண்ணெய் பசையுள்ள தோல் மற்றும் ஹார்மோன் மாறுபாடு காரணமாக பருக்கள் ஏற்படும். இதனை பருவமடைந்த பெண்கள் நோயை போல கருதுவதும் உண்டு.
இந்த பருக்களை கிள்ளி அகற்ற கூடாது என பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதனைப்போல, உடல் சுத்தம் மற்றும் அந்தரங்க உறுப்புக்கள் சுத்தம் தொடர்பாகவும் கட்டாயம் கூற வேண்டும். நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதாரம் அவசியம் என்பதை தெரிவித்து, உள்ளாடை தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி, அதன் மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனை, அதனை சந்திக்க தேவையான ஆலோசனைகள் போன்றவற்றை எடுத்துரைக்க வேண்டும். மேலும், அந்தந்த வயதில் ஏற்படும் சாதாரண மாற்றம் தான் இது என்றும், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இயற்கை மாற்றத்தில் இதுவும் ஒன்று என்பதை புரிய வைக்க வேண்டும்.
மேலும், பொது இடங்களில் தற்காத்துக்கொள்ள தேவையான ஆலோசனையையும் வழங்க வேண்டும். தினமும் வேலைக்கு தாயாக இருந்தால் மகள்களிடம் சிறிது நேரமாவது வீட்டிற்கு வந்தபின் பேச வேண்டும். உடல்நலம், படிப்பு, பிற விஷயங்கள் தொடர்பாக மனம்விட்டு பேச வேண்டும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாசத்தை பிணைக்க உதவும்.
வயதுக்கே உரித்தான பல பிரச்சனைகளில் அதிகளவு உணவுகளை எடுத்துக்கொள்ளாத பிரச்சனையும் உண்டு. உணவை சரிவர எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் இரத்த சோகை ஏற்படும். ஹீமோகுளோபின் அளவு 10 க்கு மேல் இருந்தால் படிப்பில் முன்னேற்றம், சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியம் போன்றவை மேம்படும் என்பதை விளக்க வேண்டும்.
தினமும் உணவில் நார்ச்சத்துள்ள உணவை சேர்ப்பது, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வைப்பது, அதன் நன்மையை எடுத்துரைப்பதும் நன்றே. தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளாக இருந்தால் பொறித்த மற்றும் துரித உணவுகள், காபி மற்றும் சர்க்கரை சேர்த்த இனிப்புகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.