இலங்கையில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு கடத்திவரப்பட்ட 17 கிலோ தங்கம்! காத்திருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மீனவர்கள்!
இலங்கையில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு கடத்திவரப்பட்ட 17 கிலோ தங்கம்! காத்திருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மீனவர்கள்!
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அடிக்கடி தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதிக்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து மண்டபம் கடலோரக் காவல் படையினர் உதவியுடள் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நாட்டு படகை சோதனை செய்ததில் அதில் எதுவும் சிக்கவில்லை. இதனை அடுத்து அந்த படகிலிருந்த மீனவர்கள் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், மரைக்காயா் பட்டணத்தைச் சோ்ந்த ஆஷீக்(22), அதே பகுதியைச் சோ்ந்த பாரூக்(22) என்பது தெரியவந்தது. அவர்கள், தங்கம் கடத்தி வந்ததையும் வழியில் கடலோரக் காவல் படையினரைக் கண்டவுடன் படகில் இருந்த தங்கக் கட்டி பார்சல்களில் கல்லை கட்டி முயல் தீவு அருகே கடலில் போட்டுவிட்டு அந்த இடத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம் அடையாளம் செய்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையத்து, நேற்று காலை கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முயல் தீவு பகுதிக்குச் சென்று நீா் மூழ்கி வீரா்களின் உதவியுடன் கடலில் இறங்கி தேடினா்.
அப்போது கடலுக்குள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த 6 பாா்சல்களை கைப்பற்றினா். இதில் ரூ.6 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.