கட்டாய திருமணம் முடிந்ததும், காதலனுடன் கம்பி நீட்டிய சிறுமி.. பெற்றோர், காதலனை போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!

கட்டாய திருமணம் முடிந்ததும், காதலனுடன் கம்பி நீட்டிய சிறுமி.. பெற்றோர், காதலனை போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!



girl-escaped-lover-for-her-compel-marriage

17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மற்றும் சிறுமியை கூட்டிச்சென்ற காதலன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு அருகாமையில் முடுவார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, அவசர அவசரமாக சிறுமியின் உறவினர் ஒருவருடன் கடந்த மாதம் கட்டாயத்திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், சிறுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால், திருமணம் முடிந்த அன்று இரவே தனது காதலன் ரஞ்சித்குமாருடன் ஊரை விட்டுச் சென்றுள்ளார். மேலும், சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் பாலமேடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக சிறுமியை தேடிவந்தனர்.

madhurai

அப்போது திருப்பூரில் சிறுமியும், இளைஞனும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு மதுரை அழைத்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியை கூட்டிச்சென்ற ரஞ்சித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததற்காக பெற்றோரை குழந்தை திருமண தடைச்சட்டத்தில் பாலமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை அதே பகுதியில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைத்துள்ளனர்.