கல்லூரி மாணவியின் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்: காதலரே விஷம் கொடுத்து கொன்றதாக புகார்..!

கல்லூரி மாணவியின் மர்ம மரணத்தில் அதிரடி திருப்பம்: காதலரே விஷம் கொடுத்து கொன்றதாக புகார்..!


Dramatic twist in the mysterious death of a college student

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகேயுள்ள வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது56). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் அபிதா (19). இவர் களியக்காவிளை பகுதியில் இயங்கிவரும் தனியாரருக்கு சொந்தமான கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அபிதா நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று தங்களது காதலை வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாலிபரின் குடும்பத்தினர் தங்களது மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அபிதாவை சந்திப்பதை வாலிபர் தவிர்த்து வந்துள்ளார். காதலனின் புறக்கணிப்பால் மனமுடைந்த அபிதா, வீட்டில் யாரிடமும் அதிகம் பேசாமல் சோகமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி காலை வீட்டில் இருந்த அபிதா திடீரென வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 3 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

மகள் உயிரிழந்தது குறித்து அபிதாவின் தாயார் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அபிதாவின் காதலர் தனிமையில் சந்திக்க அபிதாவை வற்புறுத்தியதாகவும், இதனையடுத்து அவரை சந்தித்த அபிதாவுக்கு அந்த வாலிபர் ஏதோ விஷம் கொடுத்ததாகவும், இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் அபிதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது மகளின் மரணத்தில் அவரது காதலன் மீது சந்தேகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நித்திரவிளை காவல்தூறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து, மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.