கந்துவட்டி வீட்டை கேட்டு மிரட்டல்... பெண் தீக்குளித்ததால் பெரும் சோகம்.!

கந்துவட்டி வீட்டை கேட்டு மிரட்டல்... பெண் தீக்குளித்ததால் பெரும் சோகம்.!



chennai-women-attempt-suicide

கந்துவட்டிக்கு கடன் வாங்கியதால், கடன் கொடுத்த பெண் வீட்டை எழுதிக் கொடுக்குமாறு மிரட்டியதால் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக நாகராஜுக்கு வேலை எதுவும் கிடைக்காததால், சித்ரா அதே பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவரிடம் அடிக்கடி வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். மேலும், 4 லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு கடன் பெற்ற நிலையில், சரிவர வட்டி பணத்தை தர முடியாததால் சுமார் 25 லட்சம் வரை பணம் தரவேண்டும் என்று ரெங்கநாயகி சித்ராவை மிரட்டி வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த வியாழனன்று மாலை 5 மணியளவில் ரங்கநாயகி, அவருடன் இரண்டு பேரை அழைத்து வந்து 'வாங்கிய கடனுக்காக இந்த வீட்டை எழுதிக் கொடு. இல்லையென்றால் நடப்பதே வேறு' என்று மிரட்டி இருக்கிறார்.

chennai

இதனால் பயந்து போன சித்ரா என்ன செய்வதென்று அறியாமல் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தீக்குளித்து உள்ளார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் அவருக்கு 50 சதவீத உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரித்த நிலையில், 'கந்துவட்டி கொடுமையால் தான், நான் தற்கொலைக்கு முயன்றேன்' என்று சித்ரா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்த காவல்துறையினர், இந்த ஆதாரத்தை வைத்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சமூக ஆர்வலர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.