அரசு பேருந்தை முந்திச்செல்ல முயற்சித்து, லாரி நடுவே சிக்கி பலியான முதியவர்.!
அரசு பேருந்தை முந்திச்செல்ல முயற்சித்து, லாரி நடுவே சிக்கி பலியான முதியவர்.!
சென்னையில் உள்ள ஆவடி திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகுதுரை (வயது 70). இவர் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். திருமுல்லைவாயல் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 70). இவர் ஓய்வுபெற்ற இரயில்வே ஊழியர் ஆவார்.
இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிரையில், நேற்று காலை ஆவடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, ஆவடி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, நின்றுகொண்டு இருந்த அரசு பேருந்தை முந்திச்செல்ல முயற்சித்துள்ளனர். பின்னால் வந்துகொண்டு இருந்த டிப்பர் லாரி, இவர்களின் வாகனம் மீது மோதியுள்ளது.
இதில், பேருந்துக்கும் - லாரிக்கும் நடுவே சிக்கிக்கொண்ட இருவரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துவிட, படுகாயமடைந்த 2 பேரையும் மீட்ட பொதுமக்கள் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அழகுதுரை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த அதிகாரிகள், மூர்த்தியை மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சாலையில் விழுந்த இருசக்கர வாகனத்தில் லாரியின் பின்புற சக்கரம் ஏறியதை தொடர்ந்து, அது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விசயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், லாரி ஓட்டுநராக ராணிப்பேட்டையை சேர்ந்த முனுசாமியை (வயது 50) கைது செய்தனர்.