சென்னை மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.! பயணி உடல் கருகி பரிதாப பலி.!
சென்னை மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.! பயணி உடல் கருகி பரிதாப பலி.!
சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்தவர் சுனில்குமார். 48 வயது நிரம்பிய இவர் கால் டாக்சி ஓட்டிவந்துள்ளார். இந்தநிலையில், நேற்று மதியம் வேலப்பன்சாவடியில் இருந்து அர்ஜூனன் என்பவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்னை சூளைமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது கார் கோயம்பேடு மேம்பாலத்தில் வடபழனி செல்லும் 100 அடி சாலையை நோக்கி இறங்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அந்த காரில் பயணம் செய்த அர்ஜூனன் உடல் கருகி உயிரிழந்தார். ஓட்டுனர் சுனில்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஓட்டுனரின் முதுகில் தீப்பிடிக்கவே, அவர் கதவை திறந்து வெளியே குதித்து, சாலையில் உருண்டு புரண்டு தீயை அணைத்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் கொழுந்து விட்டெரிந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் அலறல் சத்தம் மட்டுமே கேட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். ஆனால் காரின் பின் இருக்கையில், அமர்ந்திருந்த அர்ஜூனன் உடல் முழுதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.