கணவன் இறந்ததும் பிறந்த குழந்தை.. சந்தேகத்தால் அண்ணியை கொலை செய்த மைத்துனர்!
கணவன் இறந்ததும் பிறந்த குழந்தை.. சந்தேகத்தால் அண்ணியை கொலை செய்த மைத்துனர்!
சந்தேகத்தின் பேரில் சொந்த அண்ணியை மைத்துனர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராமலட்சுமி. சின்னத்துரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் ராமலட்சுமி மட்டும் தனியாக வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் ராமலட்சுமியின் நடவடிக்கையில் அவரது கணவர் தம்பியான கொம்பன் என்ற சேகருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது அண்ணியை சேகர் அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமலட்சுமி கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த சேகர் இதுகுறித்து தனது அண்ணியிடம், குழந்தைக்கு யார் தந்தை என கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கிடையில், ராமலட்சுமி தனக்கு பிறந்த குழந்தையை யாருக்கும் காட்டாமல், தனக்கு தெரிந்தவர்களுக்கு தத்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராமலட்சுமி மற்றும் சேகர் இருவருக்கும் இடையே நேற்று இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து ராமலட்சுமியை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சேகரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.