திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த கோடீஸ்வரர்! வீடு பணிப்பெண் மீது ஏற்பட்ட மோகம்! இறுதியில் நேர்ந்த சோகம்!
திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த கோடீஸ்வரர்! வீடு பணிப்பெண் மீது ஏற்பட்ட மோகம்! இறுதியில் நேர்ந்த சோகம்!
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் பரத்வாஜ். 50 வயதான இவர் திருமணம் செய்யாமல் பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமாக வணிகவளாகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், அவற்றின் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுரேஷ் பரத்வாஜ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பரத்வாஜ் காணவில்லை என அடையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்வாஜை தேடிவந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பரத்வாஜ் கொலை செய்யப்பட்டு, காசிமேடு கடலில், உடல் வீசப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பெண் வழக்கறிஞர் பிரீத்தி உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நடந்த கொலை குறித்து போலீசார் கூறுகையில் பரத்வாஜ், தன் வீட்டில் வேலை பார்த்த, இளம்பெண் ஒருவரின் அழகில் மயங்கி உள்ளார். அவரை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அவரின் தவறான போக்கை அறிந்த அந்த பெண் வேலையை விட்டு நின்றுள்ளார்.
ஆனாலும் பரத்வாஜ், அந்த பெண் மீது ஆசை வைத்துள்ளார். இதனை அறிந்த வழக்கறிஞர் பிரீத்தி அந்த பெண்ணை பணிய வைப்பதாக கூறி, பரத்வாஜிடம் பல மாதங்களாக, 65 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். ஆனால், பரத்வாஜ் நினைத்தது நடக்காததால், பிரீத்தியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
இதனையடுத்து பிரீத்தி காசிமேடுக்கு பரத்வாஜை அழைத்துள்ளார். அங்கு அவரை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், சுரேஷ், மனோகர், ஆகியோருடன் படகில், கடலுக்குள் அனுப்பி வைத்தார். படகில் மூவரும் சேர்ந்து பரத்வாஜை கொலை செய்து, உடலை கடலில் வீசியது தெரியவந்தது.