கரையை கடந்தது ‘அசானி’ புயல்: 15 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரையை கடந்தது ‘அசானி’ புயல்: 15 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!


asani-storm-crossed-the-coast

வங்கக் கடலில் உருவான 'அசானி' புயல், ஆந்திராவின் மசூலிப்பட்டினம், நரசப்பூர் இடையே அமைதியாக கரையை கடந்தது.

வங்கக் கடலில் உருவான 'அசானி' புயல், ஆந்திர மாநிலத்தில், மசூலிப்பட்டினத்துக்கும், நரசப்பூருக்கும் இடையே, நேற்று மாலை அமைதியாக கரையை கடந்தது. முன்னதாக தீவிர புயலில் இருந்து, புயலாகவும், பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மீண்டும் வங்கக் கடலுக்குள் நுழைந்து வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்திலும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவில் - மல்கங்கிரி, கோராபுட், ராய்கட், கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. புயலின் வீரியம் குறைந்து மேற்கு நோக்கி நகரும் என கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை ஆந்திர அரசு திறந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் 15 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வட மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.