விஷவாயு தாக்கியதால் 2 பேர் உயிரிழப்பு: கழிவுநீர் கிணற்றை திறந்த போது நிகழ்ந்த சோகம்..!



2 people died due to poison gas attack at perungudi

சென்னை, பெருங்குடி அருகேயுள்ள கல்லுக்குட்டை பகுதியில் உள்ள அன்னை சந்தியா நகரை சேர்ந்தவர் சரவணன் (49). இவர் திருவான்மியூர் பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு எதிரே உள்ள சுமார் 7 அடி ஆழம் கொண்ட உரை இறக்கப்பட்ட கழிவு நீர்  கிணற்றை சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து திருவான்மியூரை அடுத்த நீலாங்கரை பகுதியை சேர்ந்த காளிதாஸ்(55) என்பவருடன் சேர்ந்து சரவணன் கிணற்றை சுத்தம் செய்துள்ளார். அப்போது கழிவு நீர் கிணற்றின் மூடியை திறந்த போது கிணற்றிலிருந்து வந்த விஷவாயு தாக்கியதில் மயக்கமுற்ற காளிதாஸ் கிணற்றில் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன் காளிதாசை காப்பாற்ற முயன்ற போது அவரும் விஷ வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றில் விழுந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஒடி வந்து கிணற்றில் விழுந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்கு முன்பாகவே அவர்கள் இருவரும் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்த துரைப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.