சென்னையில் காய்கறி வாங்க காரில் சென்ற கிரிக்கெட் வீரர் ராபின் சிங்! போலீசார் காரை மடக்கி பிடித்து அபராதம்!
சென்னையில் காய்கறி வாங்க காரில் சென்ற கிரிக்கெட் வீரர் ராபின் சிங்! போலீசார் காரை மடக்கி பிடித்து அபராதம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கள் வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும் என தொடர்ந்து காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. தேவை இல்லாத காரணங்களுக்காக வாகனங்களில் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தனது காரில் சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து திருவான்மியூர் பகுதிக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது போக்குவரத்து போலீசார் அவரை மடக்கி விசாரித்த போது காய்கறிகள் வாங்க திருவான்மியூர் செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, போக்குவரத்து காவலர்கள் அவரிடம் காய்கறி வாங்க நடந்துதான் செல்ல வேண்டும் காரில் செல்லக்கூடாது என தெரிவித்து, அவர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்து அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர். அவருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர் முகக்கவசம் அணிந்து இருந்ததால் அவர் யாரென்பது காவல்துறையினருக்கு தெரியவில்லை, அவர் ராபின் சிங் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் போன்ற எந்த தகவலையும் கூறாமல் காரை விட்டுவிட்டு வேறு ஒரு காரை வரவழைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.