பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: கெத்து காட்டிய இந்திய வீராங்கனைகள்.! மிரண்டுபோன வெஸ்ட்இண்டீஸ்.!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹாமில்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசுடன் மோதுகிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முந்தைய ஆட்டங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினார். அவர் சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது அபார சதத்தால் இந்திய அணி வலுவான நிலைக்கு முன்னேறியது.
அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுர் 107 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தநிலையில் 50 ஓவர்கள் முடிந்தநிலையில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்களை குவித்து வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 318 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.