ஒத்த பிளவுஸுக்காக விலைமதிப்பற்ற உயிரை தொலைத்த பெண்.. கணவன் - மனைவி சண்டையில் துயரம்.!
ஒத்த பிளவுஸுக்காக விலைமதிப்பற்ற உயிரை தொலைத்த பெண்.. கணவன் - மனைவி சண்டையில் துயரம்.!
தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு கணவர் பிளவுஸ் தைத்து கொடுக்காத காரணத்தால் மனைவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஆம்பர்பேட் நகரை சார்ந்தவர் விஜயலட்சுமி (வயது 35). இவரது கணவர் ஸ்ரீனிவாஸ். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீனிவாஸ் வீடு வீடாக சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணிகள் விற்பனை செய்யும் வியாபாரியாக பணியாற்றி வந்துள்ளார். மேலும், வீட்டில் இருந்தபடியும் துணிகளை தைத்து கொடுத்து வந்துள்ளார்.
தனது மனைவிக்காக நேற்று ஸ்ரீனிவாஸ் பிளவுஸ் ஒன்றை தைத்து கொடுத்த நிலையில், அந்த பிளவுஸ் மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறவே, கணவரிடம் தனது விருப்பப்படி பிளவுஸ் தைத்து தரக்கூறி விஜயலட்சுமி கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை ஸ்ரீனிவாஸ் மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன விஜயலட்சுமி வருத்தத்துடன் காணப்படவே, ஸ்ரீனிவாஸ் கடைக்கு சென்றுள்ளார். பின்னர், மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகள், வீட்டின் படுக்கையறை பூட்டி இருப்பதை கண்டுள்ளனர். கதவை தட்டிப்பார்த்தும் எந்த சத்தமும் இல்லை. இதுகுறித்து குழந்தைகள் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த ஸ்ரீனிவாஸ் நீண்ட நேர முயற்சிக்கு பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் மனைவி விஜயலட்சுமி இறந்து கிடப்பதை கண்டுள்ளார். மனைவியின் உடலை பார்த்து ஸ்ரீனிவாஸ் கதறியழவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சூழ்நிலையை உணர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.