குடும்பச்சண்டையில் மனைவியை 4 ஆவது மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்.. மணற்குவியலால் காயத்துடன் தப்பித்த உயிர்.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, கொந்தவா புத்குக் பகுதியில், கஃதே வசதி என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் பெயிண்டராக பணியாற்றி வருபவர் நிதின் (வயது 32). இவரின் மனைவிக்கு 25 வயது ஆகிறது. இவரும் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்கள் இருவரும் கட்டிடத்தில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜன. 22 ஆம் தேதியும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நிதின், மனைவியை நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
கீழே விழுந்த பெண்மணி நல்ல வேலையாக மண் குவியல் மீது விழுந்ததால், உயிரிழப்பு இல்லாமல் முதுகுத்தண்டில் காயத்துடன் உயிர்தப்பி அலறியுள்ளார். அவரை மீட்ட பிற பணியாளர்கள், அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். பின்னர், கடந்த 23 ஆம் தேதி இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து நிதினை இன்று கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவர் கட்டிடத்தின் மேலே இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.