கை-கால்களை கட்டிப்போட்டு 5 பேர் கொண்ட கும்பல் துணிகரம்.. குடும்பத்தினர் கண்முன்னே நேர்ந்த பயங்கரம்.!
வீட்டில் இருந்த 3 பேரின் கை-கால்களை கட்டிப்போட்ட 5 பேர் கொண்ட கும்பல், நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சார்ந்தவர் சாம்ப நாயக். இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சாம்ப நாயக் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருக்கையில், அவரது வீட்டிற்கு வந்த 5 பேர் தங்களை தீபதூர் காவல் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துள்ளனர்.
பின்னர், உங்களது மருமகன் எங்களிடம் இருந்து வாங்கி வந்த நகை மற்றும் பணம், துப்பாக்கி போன்றவற்றை கொடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனைக்கேட்ட சாம்ப நாயக், தன்னிடம் மருமகன் எதுவும் தரவில்லை என்று கூறவே, அதிகாரிகள் என்று கூறிய 5 பேரும் சாம்ப நாயக்கின் மகனுக்கு தொடர்பு கொண்டு பேசி வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.
இதனையடுத்து, சாம்ப நாயக், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரின் கை-கால்களை கட்டிப்போட்ட கும்பல் பீரோவில் இருந்த ரூ.19 இலட்சம் ரொக்கம், ரூ.25 இலட்சம் மதிப்பிலான நகைகளை எடுத்துக்கொண்டு, கைதியாக சாம்ப நாயக்கை பிடித்துக்கொண்டு சென்றுள்ளது. அங்குள்ள கங்கமனக்குடி பகுதியில் சாம்ப நாயக்கை இறக்கிவிட்ட கும்பல், ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மகாலட்சுமி லே அவுட் காவல் நிலையத்தில் சாம்ப நாயக் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் தேடி வருகின்றனர்.