தம்பதிகள் தவறவிட்ட நகைகளை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சையத் ஜாகிர்.. பூ மாலை அணிவித்து பாராட்டு.!
தம்பதிகள் தவறவிட்ட நகைகளை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சையத் ஜாகிர்.. பூ மாலை அணிவித்து பாராட்டு.!
பயணத்தின் போது ஆட்டோவில் தம்பதிகள் தவறவிட்ட நகைகளை ஆட்டோ ஓட்டுநர் தம்பதிகளிடமே ஒப்படைத்தார். ஆட்டோ ஓட்டுனருக்கு அதிகாரிகள் பூ மாலை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், லங்கார் ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சையத் ஜாகிர். இவரது ஆட்டோவில் நேற்று தம்பதியொருவர் பயணம் செய்துள்ளனர்.
பயணத்தின் போது அவர்கள் நகை வைத்திருந்த கைப்பையை ஆட்டோவிலேயே தவறவிட்டு சென்ற நிலையில், வீட்டிற்கு சென்று அதனை காணாது பரிதவித்துள்ளனர். மேலும், நகை மாயமானது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பையொன்று இருப்பதை பார்த்த நிலையில், அதில் நகைகள் இருந்துள்ளது. மேலும், நகையை தொலைத்த தம்பதியின் அலைபேசி எண்ணும் நகை வாங்கிய ரசீதில் இருந்துள்ளது.
இதனையடுத்து, தம்பதிகளுக்கு தொடர்பு கொண்ட ஓட்டுநர் தகவலை தெரிவிக்க, அவர்கள் மிகுந்த இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி, அதிகாரிகளுக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் லாங்கர் ஹவுஸ் காவல்நிலைய ஆய்வாளர் கே ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் தம்பதிகளின் நகைகளை பத்திரமாக ஒப்படைக்க, ஆட்டோ ஓட்டுநர் சையத் ஜாகிருக்கு பூ மாலை அணிவித்து அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். நகைகளை பெற்றுக்கொண்ட தம்பதிகளும் கண்ணீர் மல்க ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தனர்.