நெருங்கி வரும் ஜாவத்.. 45 ஆயிரம் மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்.!
நெருங்கி வரும் ஜாவத்.. 45 ஆயிரம் மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்.!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இப்புயலினால் வடகடலோர ஆந்திர பகுதிகள், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒடிசா மாநிலத்தின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபரா மாவட்டமும் பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜாவத் புயலானது விசாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து 230 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காரணத்தால், ஆந்திரா மற்றும் தெற்கு கடலோர ஒடிசா பகுதியில் மிககனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 11 தேசிய பேரிடர் மீட்பு படை குழு, 6 கடலோர காவற்படை குழு மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.