கொரோனாவில் தமிழகத்தை மிஞ்சும் ஆந்திரா! ஆந்திர மாநிலத்தில் இன்று 7,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனாவில் தமிழகத்தை மிஞ்சும் ஆந்திரா! ஆந்திர மாநிலத்தில் இன்று 7,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 72,711 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தை விட ஆந்திராவில் மிக அதிகமாக கொரோனா பரவி வருகிறது.
இன்று ஆந்திராவில் கொரோனா பாதிப்பால் 61 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 37,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.