42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
"படம் மரண மாஸ்... ஆனால்..!" சர்க்கார் ஒரு கண்ணோட்டம்
![sarkar-full-review](https://cdn.tamilspark.com/large/large_1541086518_vijay-sarkar-14378.jpg)
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வரும் இன்று தீபாவளி தினத்தன்று உலகமெங்கும் சர்க்கார் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் வெளியானதிலிருந்து படம் முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டது என்பது தெரியவந்தது. இதனால் விஜய்யை அரசியலில் இறக்கி பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்தது.
உலகின் மிகப்பெரிய கார்பொரேட் கம்பெனியின் தலைமை செயலாளராக இருக்கும் விஜய், வெளிநாட்டிலிருந்து தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறார். அப்போது அவரது ஓட்டினை வேறு யாரோ போட்டு விட்டனர் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அதன்விளைவாக அதன்பின் அவர் எடுக்கும் நடவடிக்கைகள்தான் முழு படத்தையும் காட்டுகிறது.
தன்னுடைய வாக்குரிமையை போல் பல மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டதை உணரும் விஜய் தனது தலைமைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்தில் போராட துவங்குகிறார். இளைஞர்கள் படை அவருக்குப் பின்னால் துணையாக நிற்க அரசியல் தலைவர்களை நேரடியாக எதிர்த்து பேசத் துவங்குகிறார்.
படத்தில் வரும் அரசியல்வாதிகளை எதிர்த்து பேசும் ஒவ்வொரு வசனங்களும் தற்போது ஆட்சியில் இருக்கும் தலைவர்களை எதிர்த்துப் பேசுவது போலவும், அவர்களுக்கு எச்சரிக்கை விடுவது போலவும் அமைந்துள்ளது. இதுபோன்ற வசனங்களை இயக்குனர் முருகதாஸ் மிகவும் தைரியமாக படத்தில் வைத்துள்ளார்.
மீனவ குடும்பம் படும் துயரங்களை அவர் பேசும்போது கண்களில் நீர் வழிய துவங்குகின்றது. படம் முழுக்க முழுக்க மக்களுக்கு நடக்கும் அநீதிகளை எடுத்துக் கூறும் விதமாக அமைந்துள்ளது. இத்தகைய முயற்சியை இயக்குனர் முருகதாஸ் மிகவும் தைரியத்தோடு கையிலெடுத்துள்ளார். இதனை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.
தற்பொழுதைய அரசியல் சூழ்நிலைகளையும் மக்கள் படும் இன்னல்களையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறியதில் சர்க்கார் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதே சமயம் படத்தில் ஒரு சில ஏமாற்றங்களும் அமைந்துள்ளன. வழக்கமாக முருகதாஸ் இயக்கும் படங்கள் எந்தவித குறையும் இன்றி வேற லெவலில் அமையும். ஆனால் சர்க்காரில் ஆங்காங்கே சில தவறுகள் நடந்துள்ளன. குறிப்பாக படத்திற்கு தேவை இல்லாத பாடல்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் அமைந்து விட்டது. படத்தில் வரும் சண்டை காட்சிகள் தெலுங்கு படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் போல் வழக்கத்திற்கு மாறாக அமைந்துள்ளன. மேலும் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஈடான வில்லன்களாக ராதாரவி மற்றும் பழ கருப்பையா அமையவில்லை. வரலட்சுமியின் நடிப்பு விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு.
கீர்த்தி சுரேஷ் வழக்கம்போல் திரையில் அழகாகத்தான் தோன்றுகிறார். ஆனால் அவர் தோன்றும் காட்சிகள் தான் படத்திற்கு தேவையா என்ற கேள்வியை எழுப்புகிறது. பின்னணி இசையில் ரகுமான் வழக்கம்போல் மிரட்டி உள்ளார். ஆனால் ஒரு விரல் புரட்சி மற்றும் டாப் டக்கர் பாடல்களை தவிர மற்ற பாடல்கள் சுமாராகத்தான் இருக்கின்றன.
எப்படியோ அரசியல் பின்னணியில் மாஸாக விஜய்க்கு அமைந்துள்ள இந்தப் படம் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.