என்னால் தான் எஸ்.பி.க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா.? பாடகி மாளவிகா விளக்கம்!

என்னால் தான் எஸ்.பி.க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா.? பாடகி மாளவிகா விளக்கம்!


Malavika talk about spb

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர்  செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனைகள் மேற்கொண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், பாடகி மாளவிகா தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரும், எஸ்.பி.பி பங்கேற்ற தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பங்கேற்றார். அவரால்தான் எஸ்.பி.பிக்கு கொரோனா பரவியது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்தவிவகாரம் குறித்து மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.

SPB

மாளவிகா அவரது முகநூல் பதிவில், ஹேமசந்திரா, அனுதீப் உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்ற எஸ்.பி.பியின் நிகழ்ச்சி ஜூலை 30-ம் தேதி மற்றும் எஸ்.பி.பியுடன் நான், காருண்யா, சத்யா யாமினி உள்ளிட்ட பெண் பாடகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஜூலை 31-ம் தேதி படமாக்கப்பட்டது.

ஒருவேளை அந்த சமயத்தில் எனக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் என்னுடன் அறையில் இருந்த மூன்று பெண் பாடகர்கள் மற்றும் தொகுப்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும். என்னுடைய சகோதரி பாடகியும் கிடையாது. அதுவும் அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். எனவே எனது சகோதரி ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார்? ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து என்னுடைய கணவர் வீட்டிலிருந்து பணி செய்துவருகிறார். என்னுடைய வயதான பெற்றோர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 5 மாதங்களாக வீட்டு வேலைக்கு கூட வேலையாட்கள் வைக்கவில்லை. எனக்கு 2 வயது குழந்தை உள்ளது. அதன்காரணமாக கடந்த 5 மாதங்களாக நான் எந்த நிகழ்ச்சிக்காகவும் வெளியே செல்லவில்லை. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகத்தான் நான் முதன்முதலாக வீட்டைவிட்டு வெளியே வந்தேன். 

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை அறிந்த பிறகு தான் நான் கொரோனா சோதனை செய்தேன். அதற்கான சோதனை முடிவு ஆகஸ்ட் 8-ம் தேதிதான் வந்தது. எனக்கு, என்னுடைய பெற்றோருக்கு, என்னுடைய குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடைய கணவருக்கு நெகடிவ். அதனையடுத்து, நாங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். தயவுசெய்து தேவையில்லாத வதந்திகளைப் பரப்பவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.