"HIV போன்றே கொரோனோவும் நம்மை விட்டு அகலாது; நாம் தான் பழகி கொள்ள வேண்டும்" WHO அதிர்ச்சி கருத்து!
WHO alerts people should learn to live with corono
கொடிய கொரோனா வைரஸ் நம்மை விட்டு அகலப்போவதாக தெரியவில்லை. உலக மக்கள் தான் அதனுடன் சேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம்(WHO) நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் இதுவரை 44 லட்சம் பாதிப்பு மற்றும் 3 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் இந்த வைரஸினை தாங்கும் சக்திகொண்ட தடுப்பு மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் ஊரடங்கு மட்டுமே இதற்கான தடுப்பாக அணைத்து நாடுகளும் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலகின் பாதிக்கும் மேலான மக்கள் தொகை தற்போது ஊடங்களில் உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள WHO அவசரப்பிரிவு இயக்குனர் மைக்கேல் ரியான், "புதிதாக மனித குலத்தை தாக்கியுள்ள இந்த வைரஸினை பற்றி புரிந்துகொள்ள இயலவில்லை. இதனால் இது எப்போது நம்மை விட்டு அகலும் என்றும் கணிக்க முடியவில்லை. இந்த வைரஸ் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க துவங்கிவிட்டது.
இதேபோன்று தான் HIV வைரஸ் நம்மை தாக்க துவங்கியது. HIV வைரஸும் இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளது. ஆனால் நாம் அதனை பரவாமல் தடுக்க பல கட்டுப்பாடுகளுடன் வாழ பழகிவிட்டோம். அதே போல் இந்த கொரோனா வைரஸுடனும் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
பல நாடுகள் ஊரடங்கினை தளர்க்க துவங்கிவிட்டன. இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனை வெல்ல நாம் பல காலம் போராட வேண்டி வரும். நம்மையே நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.