கடவுளின் கண்கள்.... மழை பெய்தால் கண்ணீர் வடிக்கும்! பல்கேரியாவில் வியக்க வைக்கும் மர்ம குகை! பின்னணி ரகசியம் என்ன.?
பல்கேரியாவில் உள்ள ப்ரோஹோத்னா குகை, இயற்கையாக உருவான கண் வடிவ துளைகளால் ‘கடவுளின் கண்கள்’ என அழைக்கப்படுகிறது. இந்த அதிசயம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.
ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் அமைந்துள்ள ப்ரோஹோத்னா குகை, அதன் தனித்துவமான தோற்றத்தால் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. தலைநகர் சோஃபியாவிலிருந்து சுமார் இரண்டு மணி நேர பயண தூரத்தில் உள்ள இந்த குகை, இயற்கை உருவாக்கிய அரிய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக அதன் கூரையில் காணப்படும் இரண்டு பெரிய துளைகளே இதற்கு உலகப் புகழை பெற்றுத் தந்துள்ளன.
வியக்க வைக்கும் ‘கடவுளின் கண்கள்’
குகையின் மேற்கூரையில் மனித கண்களை ஒத்திருக்கும் வகையில் இரண்டு பிரம்மாண்ட துளைகள் இயற்கையாக உருவாகியுள்ளன. இதனால் இந்த இடம் கடவுளின் கண்கள் (Eyes of God) என்ற பெயரில் அறியப்படுகிறது. பகல் நேரங்களில் சூரிய ஒளி இந்த துளைகள் வழியாக குகைக்குள் பாயும் போது, வானமே குகைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற அரிய காட்சி உருவாகிறது.
மழைக்காலத்தில் மாறும் தோற்றம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை அரிப்பு மற்றும் சுண்ணாம்புப் பாறைகளின் மாற்றங்களால் இந்த குகை உருவானதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் கண் போன்ற துளைகள் வழியாக தண்ணீர் கீழே வழிந்தோடும் காட்சி, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. அந்த நேரத்தில் குகையின் தோற்றம் மேலும் மர்மமானதாக மாறுகிறது.
இதையும் படிங்க: ஐயோ... பார்க்கவே பயமா இருக்கே! மாயமந்திரங்கள் செய்யும் இடம்! பறவை போல மாறி பேசிய சூனியக்காரி! பீதியில் மக்கள்...! மர்ம வீடியோ!
சாகச விரும்பிகளின் முக்கிய தளம்
சுமார் 880 அடி நீளமுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதையடுத்து ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். ப்ரோஹோத்னா குகை பகுதியில் பங்கீ ஜம்பிங் மற்றும் ராக் கிளைம்பிங் போன்ற சாகச விளையாட்டுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இயற்கை அழகையும் சாகச அனுபவத்தையும் ஒரே இடத்தில் ரசிக்க விரும்புவோரின் விருப்பமான சுற்றுலாத் தளமாக இது விளங்கி வருகிறது.