ஐடி ஊழியர்களுக்கு இந்த நிலைமையா? தொடர்ந்து பறிபோகும் வேலை... மீண்டும் 1500 பேர் பணிநீக்கம்..!!!
மின்சார வாகன நிறுவனமான லூசிட் மோட்டார்ஸ், 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அரிசோனா தொழிற்சாலையின் இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்துள்ளது. செயல்திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சந்தையில் கவனம் பெற்றுள்ளன.
அமெரிக்க மின்சார வாகனத் துறையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லூசிட் மோட்டார்ஸ், தனது பணியாளர்களில் 18 சதவீதத்தினரை நீக்குவதாக அறிவித்துள்ளது. சுமார் 1,500 பேர் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட உள்ளனர். இதனுடன், அரிசோனாவில் உள்ள அதன் முக்கிய தொழிற்சாலையின் இரண்டாவது ஷிப்ட் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களில் இரண்டாவது பெரிய பணிநீக்கம்
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்த லூசிட் மோட்டார்ஸ், தற்போது மீண்டும் பெரிய அளவிலான ஊழியர் குறைப்பை மேற்கொண்டுள்ளது. தகவலின்படி, நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமைப்படுத்தி நீண்டகால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கூறப்படுகிறது.
புதிய தலைமை நிர்வாக அதிகாரி சில்வியோ நாபோலி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மறுசீரமைப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் 'முதன்மை செயல்பாட்டு அதிகாரி' பதவி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. தற்காலிக சிஇஓவாக செயல்பட்டு வந்த மார்க் விண்டர்ஹாஃப் நிறுவனத்தை விட்டு வெளியேறியதும் குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: மீண்டும் அதிமுகவில் கூண்டோடு இணைந்த முக்கிய புள்ளிகள்! மகிழ்ச்சியில் மகிழும் எடப்பாடி!
செலவைக் குறைத்து போட்டியை எதிர்கொள்ள திட்டம்
இந்த மாற்றங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 158 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்க முடியும் என நிறுவனம் கணித்துள்ளது. பணிநீக்கத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடாக சுமார் 32 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் நிறைவடையும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய SUV மற்றும் ரோபோடாக்ஸி கூட்டணி
அமெரிக்க EV Market தற்போது மந்தநிலையை சந்தித்து வரும் சூழலில், லூசிட் மோட்டார்ஸ் புதிய வணிக வாய்ப்புகளை நோக்கி நகர்கிறது. இந்த ஆண்டு பிற்பகுதியில் 50,000 அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையில் 'லூசிட் காஸ்மாஸ் எஸ்யூவி' மாடலை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.
அதே நேரத்தில், சான் பிரான்சிஸ்கோவில் சொகுசு ரோபோடாக்ஸி சேவையை வழங்க உபெர் மற்றும் நியூரோ நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் லூசிட் மோட்டார்ஸின் அடுத்த கட்ட வளர்ச்சித் திட்டங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: ஒரே நேரத்தில் 6 MP-க்கள் கட்சியில் இருந்து விலகல்...!!! அரசியலில் பெரும் பரபரப்பு..!!!