பலமுறை அழைத்தும் போனை எடுக்காத மகன்! ஐஐடி விடுதியில் ஜன்னல் வழியே ஊழியர் கண்ட அதிர்ச்சி! பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்....கதறி அழும் பெற்றோர்...!!!
மும்பை ஐஐடி விடுதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடி பம்பாய் வளாக விடுதியில், ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இரண்டாம் ஆண்டு மாணவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக பவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெற்றோரின் அழைப்புக்கு பதில் வராததால் சந்தேகம்
மெட்டீரியல் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் படித்து வந்த மாணவர், வழக்கம்போல் அன்றைய தினம் வகுப்புகளில் பங்கேற்றுவிட்டு மாலையில் விடுதி அறைக்குத் திரும்பியுள்ளார். மாலை 5 மணிக்குப் பிறகு பெற்றோர் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், அவர்கள் உடனடியாக ஐஐடி பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி! விடுதியில் 19 வயது மருத்துவ மாணவி மர்மமான முறையில் மரணம்! தீவிர விசாரணையில் போலீஸ்.!
இதையடுத்து பாதுகாப்பு ஊழியர்கள் மாணவரின் அறைக்குச் சென்றபோது, அது உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மாணவர் அறைக்குள் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை குறிப்பு எதுவும் சிக்கவில்லை
சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலை குறிப்பும் கிடைக்கவில்லை என்பதால், மாணவரின் அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் இருந்து பெற்றோர் மும்பை வந்துள்ள நிலையில், வழக்கின் அனைத்து அம்சங்களையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு மனநல ஆதரவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.